காட்பாடியில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் 1,236 பேர் அனுப்பி வைப்பு


காட்பாடியில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் 1,236 பேர் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 7 May 2020 4:35 AM GMT (Updated: 7 May 2020 4:35 AM GMT)

காட்பாடியில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு வடமாநிலத்தை சேர்ந்த 1,236 பேர் சிறப்பு ரெயில் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காட்பாடி,

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வேலூரில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வந்தது. இருந்தாலும் மூன்றாவது ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதால் கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். எனவே தங்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பக் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி வேலூரில் எவ்வளவு பேர் தங்கியுள்ளனர்?, அவர்கள் எந்த மாநிலத்துக்கு செல்லவேண்டும் என்ற கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை வடமாநிலத்தவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி மங்கத்ராம் சர்மா காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர்களை சிறப்பு ரெயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

1,236 பேர்

அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 1,236 பேர் 17 அரசு சிறப்பு பஸ்களில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கு தயாராக நின்றிருந்த ரெயில் பெட்டியில் ஏறினர். இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், மகேஷ்குமார், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் சிறப்பு ரெயில் காட்பாடியிலிருந்து இரவு 10.55மணிக்கு புறப்பட்டு சென்றது.

செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

வடமாநிலத்தவர்கள் காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பும் நடவடிக்கையை படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் பத்திரிகை புகைப்படக்காரர்கள், வீடியோ கேமராமேன்கள் மற்றும் நிருபர்கள் குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு ரெயில் நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எதற்காக உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என அவர்கள் அதிகாரிகளை கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை.


Next Story