கரூர் மாவட்டத்தில், 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு


கரூர் மாவட்டத்தில், 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 7 May 2020 4:37 AM GMT (Updated: 7 May 2020 4:37 AM GMT)

கரூர் மாவட்டத்தில், 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதையொட்டி கடை முன்பு மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதையொட்டி கடை முன்பு மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தாலும் டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, கடைகளில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடும் பணி நடந்து முடிந்தது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் 95 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி பாதுகாப்பாக டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 3 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. அதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஏற்கனவே கடைகளில் இருந்து காலி செய்து திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் வைக்கப்பட்டு உள்ள மதுபானங்கள் அனைத்தும் நேற்று அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

95 கடைகள்

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கரூர் மாவட்டம் முழுவதும் 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடைகள் முன்பு கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில் வாங்க வருகிறவர்கள் 6 அடி இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டம் போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. பார்கள் செயல்படாது என்பதால் கவுண்ட்டரில் மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படும். மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பும் போடப்படும்.

இதுதவிர கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் முககவசம், கையுறை அணிந்து வியாபாரத்தை கவனிக்க வேண்டும். சமூக இடைவெளி, பாதுகாப்பு அம்சங்களுடன் மட்டுமே கடைகளில் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. என்றார்.

Next Story