தஞ்சையில் மேலும் 2 வாலிபர்களுக்கு கொரோனா வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கு பரிசோதனை


தஞ்சையில் மேலும் 2 வாலிபர்களுக்கு கொரோனா வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 7 May 2020 11:12 PM GMT (Updated: 7 May 2020 11:12 PM GMT)

தஞ்சையில் மேலும் 2 வாலிபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

தஞ்சாவூர், 

தஞ்சையில் மேலும் 2 வாலிபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் குணம் அடைந்த 43 பேர் வீடு திரும்பினர். 20 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்த 34 வயதான பெண் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். தற்போது 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 2 பேருக்கு உறுதி

குணம் அடைந்து வீடு திரும்பியவரை மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் செல்வம் மற்றும் டாக்டர்கள் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். குணம் அடைந்து வீடு செல்லும் நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவர்களது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 2 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை அசோக் நகரில் பெயிண்டராக பணியாற்றி வரும் பாபநாசத்தை அடுத்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபரும், சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்க்கும் அய்யம்பேட்டையை சேர்ந்த 27 வயது வாலிபரும் தஞ்சைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தனர். இருவருக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

65 ஆக உயர்வு

இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சென்னையிலிருந்து வந்தவர்கள் 7 பேர் ஆவர்.

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 6 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6 ஆயிரத்து 329 பேருக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 417 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

40 பேருக்கு பரிசோதனை

இந்த நிலையில் மராட்டியத்தில் வேலை பார்த்து வந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 14 பேர் தனி பஸ் மூலம் தஞ்சை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் ஐதராபாத்தில் இருந்து பாபநாசம் வந்த 26 பேரை போலீசார் தஞ்சையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 40 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story