மராட்டியத்தில் மேலும் 1,200 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 43 பேர் பலி


மராட்டியத்தில் மேலும் 1,200 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 43 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2020 11:13 PM GMT (Updated: 7 May 2020 11:13 PM GMT)

மராட்டியத்தில் மேலும் 1,200 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் 43 பேர் பலியானார்கள்.

மும்பை, 

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவ தொடங்கி உள்ளது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்றும் மராட்டியத்தில் 1,216 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 974 ஆகி உள்ளது. இதேபோல மராட்டியத்தில் ஒரேநாளில் 43 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை மாநிலத்தில் 694 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்து 301 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

மும்பை

இதேபோல தலைநகர் மும்பையில் நேற்று மேலும் 692 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 219 ஆனது.

இதுதவிர நிதி தலைநகரில் புதிதாக 25 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 435 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story