சேத்தூரில் பரபரப்பு: சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற வியாபாரி கைது


சேத்தூரில் பரபரப்பு: சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற வியாபாரி கைது
x
தினத்தந்தி 7 May 2020 11:51 PM GMT (Updated: 7 May 2020 11:51 PM GMT)

சேத்தூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆட்டு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தளவாய்புரம், 

சேத்தூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணப்பெருமாள் (வயது 80). இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இளைய மகன் குருவையா (43) ஆட்டு வியாபாரி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் மனைவி மற்றும் மகள்கள் இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், குருவையா தனது தந்தை லட்சுமணப்பெருமாளிடம் சொத்து விஷயத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குருவையா ஆத்திரத்தில் அரிவாளால் தனது தந்தையை வெட்டினார். இதில் லட்சுமணப்பெருமாள் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார். இதுகுறித்து சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து குருவையாவை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story