தர்மபுரி மாவட்டத்தில் 54 மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன


தர்மபுரி மாவட்டத்தில் 54 மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 8 May 2020 12:29 AM GMT (Updated: 8 May 2020 12:29 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 54 மதுபானக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. எல்லப்புடையாம்பட்டியில் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் மதுக்கடை திறக்கப்படவில்லை.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 65 மதுபானக்கடைகள் உள்ளன. இந்த மதுபான கடைகளில் நகர்ப்புறங்களில் உள்ள 9 மதுபானக்கடைகள் உள்ளிட்ட 10 மதுபானக்கடைகள் தவிர மற்றவை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 54 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகள் முன்பு நீண்ட வரிசைகளில் காத்திருந்த பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

மதுபானம் வாங்கியவர்களிடம் ஆதார் விவரங்கள் கடை முன்பு சேகரிக்கப்பட்டன. சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மதுபானம் வாங்க திரண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அருகருகே நின்றனர். அந்த பகுதிகளில் போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினார்கள்.

போராட்டம்

அரூர் அருகே உள்ள எல்லப்புடையாம்பட்டியில் உள்ள மதுபானக்கடை ஊரடங்கிற்காக மூடப்பட்டபோது அந்த கடையை திறக்ககூடாது என முடிவெடுத்த கிராமமக்கள் கடைமுன்பு பாறைகளை உருட்டி வந்து போட்டு வைத்தனர். அந்த கடையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த பூட்டின்மீது கூடுதலாக பூட்டுகள் போட்டு பூட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த மதுக்கடையை மீண்டும் திறக்ககூடாது என்று வலியுறுத்தி கடை முன்பு நேற்று திரண்ட பெண்கள் மற்றும் கிராமமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் செயல்பட்ட மதுபானக்கடையால் இந்த வழியாக சென்ற பெண்கள், மாணவ-மாணவிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த மதுபானக்கடையை மீண்டும் திறந்தால் இந்த பகுதி மக்கள், பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எனவே மதுபானக்கடையை திறக்ககூடாது என்றனர். இதுதொடர்பாக தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இருந்தபோதிலும் கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மதுபானக்கடை நேற்று திறக்கப்படவில்லை. 

Next Story