மதுபான கடைகள் திறப்பை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் போராட்டம்


மதுபான கடைகள் திறப்பை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 12:32 AM GMT (Updated: 8 May 2020 12:32 AM GMT)

மதுபான கடைகள் திறப்பை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. இதை கண்டித்து தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு சின்னம் அணிந்து சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபடுமாறு அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் கருப்பு சின்னம் அணிந்து தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு சின்னம் அணிந்தும் மதுபானகடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து தனது குடும்பத்தினருடன் கோஷங்கள் எழுப்பினார். இதில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பென்னாகரத்தில் மதுபானக்கடைகள் திறப்பை கண்டித்து பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன், நிர்வாகிகள் முருகேசன், கமலேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,மொரப்பூர், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோபிநாதம்படடி கூட்ரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்னர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பென்னாகரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் தேவராசன் மற்றும் நிர்வாகிகள் மதுபான கடைகள் திறப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தித்தியோப்பனஅள்ளி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சின்னசாமி தலைமையிலும், பாப்பாரப்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களிலும் கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் மதுபானக்கடைகள் திறப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story