தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டம்


தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 6:16 AM GMT (Updated: 8 May 2020 6:16 AM GMT)

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்களின் வீடுகளின் முன்பு நின்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட மாநில அரசை கண்டித்தும், மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலரும், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் தங்களின் வீடுகளின் நின்றபடி பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் போடியில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் சன்னாசி மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு நின்று மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுடன் தி.மு.க. நிர்வாகிகளும் இருந்தனர். கம்பத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. நகர செயலாளர் நெப்போலியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

Next Story