கடை திறக்கும் முன்பே குவிந்தனர்: நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய குடிமகன்கள் - கூட்டத்தை ஒழுங்குப்படுத்த சிரமப்பட்ட போலீசார்


கடை திறக்கும் முன்பே குவிந்தனர்: நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய குடிமகன்கள் - கூட்டத்தை ஒழுங்குப்படுத்த சிரமப்பட்ட போலீசார்
x
தினத்தந்தி 8 May 2020 6:37 AM GMT (Updated: 8 May 2020 6:37 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்கும் முன்பே குடிமகன்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கி சென்றனர்.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து தமிழகத்தில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 155 மதுக்கடைகள் உள்ளன. அதில் கொரோனா பாதித்த பகுதிகள், கூட்ட நெரிசல் ஏற்படும் பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள 110 மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த குடிமகன்கள் மதுக்கடைகளில் குவிந்தனர். காலை 10 மணிக்கு தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், காலை 7 மணிக்கே குடிமகன்கள் மதுக்கடைக்கு படையெடுத்தனர். இதனால் 9 மணிக்கே திண்டுக்கல் நாகல்நகர், பஸ்நிலையம், சத்திரம் சாலை உள்பட பல பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மதுக்கடையில் நெரிசலை தவிர்க்கும் வகையில் கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், சுமார் 1½ மாதமாக மதுகுடிக்க முடியாமல் தவித்த குடிமகன்கள் கொரோனா அச்சம் சிறிதும் இல்லாமல் ஆர்வமிகுதியில் முண்டியடித்தனர். இதனால் சில இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டைகள் மூலம் தடுப்பு அமைத்து இருந்தனர். பெரும்பாலான பகுதியில் கூட்டம் நீண்ட வரிசையில் காணப்பட்டது. ஒருசில இடங்களில் 1 கி.மீ. தூரத்துக்கு வரிசை காணப்பட்டது. எனினும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகவும் பொறுமையாக நின்று மதுவை வாங்கி சென்றனர்.

அதேநேரம் கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் வழங்கி மது விற்பனை செய்யப்பட்டது. இதனால் மதுவிற்பனை நேற்று களைகட்டியது. ஒரு நபருக்கு ஒரு புல் அல்லது 2 பீர்கள் அல்லது 4 குவாட்டர்கள் என கணக்கில் மதுவிற்கப்பட்டது. ஆனால், ஆதார் அட்டை இல்லாத, முக கவசம் அணியாத நபர்களுக்கு மதுபானம் வழங்கப்படவில்லை. சுமார் 1½ மாதத்துக்கு பின்னர் மதுவை வாங்கிய மகிழ்ச்சியில் குடிமகன்கள் பெருமூச்சுவிட்டபடி சென்றனர்.

Next Story