வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தியில் பேசி ஆடியோ வெளியிட்ட கலெக்டர்


வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தியில் பேசி ஆடியோ வெளியிட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 8 May 2020 11:15 PM GMT (Updated: 8 May 2020 8:14 PM GMT)

‘வெளிமாநிலம் செல்ல டிக்கெட் என்ற புரளியை நம்ப வேண்டாம்’ என்று வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தியில் பேசி கலெக்டர் ஆடியோ வெளியிட்டார்.

திருப்பூர், 

திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், வடமாநில தொழிலாளர்களுக்கு இந்தியில் பேசிய விழிப்புணர்வு ஆடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆடியோ தொழில்துறையினர் வாட்ஸ்-அப் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த இந்தியில் பேசிய ஆடியோவில், ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி. ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம், அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. வெகுதொலைவில் இருந்து இங்கு வந்து பணியாற்றி வருகிறீர் கள். உங்களுடைய வேதனை, துயரத்தை மாவட்ட நிர்வாகம் அறிந்து வைத்துள்ளது. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற உங்கள் எண்ணம் புரிகிறது.

இது தொடர்பாக உங்கள் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. சொந்த ஊருக்கு நீங்கள் சென்றாலும் அங்கு உங்களை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளித்து அதன்பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள். அதற்கான வேலை நடக்கிறது. அதுவரை அமைதியாக இருங்கள். உங்களை போல் நானும் வேறு மாவட்டத்தில் இருந்து இங்கு பணியாற்ற வந்துள்ளேன்.

வெளிமாநிலம் செல்ல டிக்கெட் தருகிறோம், டோக்கன் தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம். அது புரளி. இதுவரை அரசு தரப்பில் அப்படி எதுவும் வழங்கவில்லை. உங்களுக்கு எந்த தகவலாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று பேசியுள்ளார்.

Next Story