கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண்கள் உள்பட 46 பேர் அனுமதி


கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண்கள் உள்பட 46 பேர் அனுமதி
x
தினத்தந்தி 8 May 2020 10:30 PM GMT (Updated: 9 May 2020 2:52 AM GMT)

கொரோனா தொற்று சந்தேகத்துடன் கோவை ஆஸ்பத்திரிகளில் பெண்கள் உள்பட 46 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் இதுவரை 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 141 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதி 4 பேர் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றுடன் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கோவையை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் இறந்து விட்டார்.

இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. அவர்களில் 9 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்கள். மீதி 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 5 நாட்களாக கோவை மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை

இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா சந்தேகத்துடன் 46 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 4 பேர், பெண்கள்-42 பேர். இதில் 40 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் 42 பேர் பெண்களாக உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்களா? அல்லது வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்களா:? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தொற்று சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் தான் அதிகம். நேற்று தான் ஆண்களை விட பெண்கள் பல மடங்கு அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story