நெல்லை சந்திப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது


நெல்லை சந்திப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 May 2020 10:30 PM GMT (Updated: 9 May 2020 9:28 PM GMT)

நெல்லை சந்திப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

நெல்லை, 

நெல்லை மாநகரில் ஏற்கனவே பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. விரிவாக்க பகுதிகள் மற்றும் ஒருசில பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்காமல் இருந்து வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளிலும் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி பெரிய கட்டுமான நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு த.மு. ரோடு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்காமல் விடுபட்டு இருந்தது. அங்கு பாதாள சாக்கடை அமைக்க தேவையான காங்கிரீட் சுவர்கள், கட்டுமான உபகரணங்கள் தயார் நிலையில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பணி தொடங்கப்படாமல் இருந்தது.

தற்போது கொரோனாவால் ரெயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து இல்லாததால் த.மு. ரோடு வெறிச்சோடி கிடக்கிறது. இதையடுத்து அந்த ரோட்டில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. விரைவில் இந்த பணியை முடித்து, கட்டிடங்களுடன் இணைப்பும் கொடுக்கப்படுகிறது.

இதேபோல் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. எஸ்.என்.ஹைரோட்டில் விடுபட்ட பகுதியில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.

Next Story