தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட 92 சதவீத பெண்கள் ஆதரவு - லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தகவல்


தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட 92 சதவீத பெண்கள் ஆதரவு - லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 9 May 2020 10:00 PM GMT (Updated: 10 May 2020 2:38 AM GMT)

தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட 92 சதவீத பெண்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.

ஊட்டி,

பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் மனநிலை, பொருளாதார நிலை, அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழகத்தில் 35 மாவட்டங்களில் 3,500 பேரிடம் கேள்விகள், கருத்துகள் கேட்கப்பட்டு கள ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தமிழக அரசு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிய ரூ.1,000 தினக்கூலிகளுக்கு போதுமானதாக உள்ளதா? என்று கேட்டதற்கு 89 சதவீதத்தினர் இல்லை என்று கருத்து தெரிவித்தனர். பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரிடம் பொதுமக்கள் அதிகம் எதிர்பார்ப்பது அடிப்படை நிவாரண உதவிகள் என்று 87 சதவீத மக்கள் பதில் அளித்தனர். தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் நிரந்தரமாக மூட 63 சதவீத ஆண்களும், 92 சதவீத பெண்களும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். அரசின் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போய் சேர்ந்து உள்ளது.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கான நிவாரண உதவியாக ஏழை, நடுத்தர மக்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்க வேண்டும். சிறு,குறு தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கிகளில் கூடுதல் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர் கள் எதிர்பார்த்து உள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்வதை தடுக்க அரசு கண்டிப்பான உத்தரவுகளை வழங்க வேண்டும். வங்கிக்கடன் தவணைகளை 3 மாதங்களுக்கு செலுத்த தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். செல்போன் இணைப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சில ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங் வசதியை நிறுத்தி வைத்து உள்ளதாகவும், சிலரது இணைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டு இருப்பதாகவும், அதனால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story