இடங்கணசாலையில் ஊருக்கு செல்ல வசதி வேண்டி வடமாநில தொழிலாளர்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு


இடங்கணசாலையில் ஊருக்கு செல்ல வசதி வேண்டி வடமாநில தொழிலாளர்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2020 4:24 AM GMT (Updated: 10 May 2020 4:24 AM GMT)

இடங்கணசாலையில் ஊருக்கு செல்ல வசதி வேண்டி வடமாநில தொழிலாளர்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு.

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, இடங்கணசாலை, நடுவனேரி, வேம்படிதாளம், கே.கே.நகர், பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி, உள்ளிட்ட இளம்பிள்ளையை சுற்றியுள்ள பகுதிகளில் உத்தரபிரதேசம், பீகார், அசாம் உள்பட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் விசைத்தறி ஜவுளி மற்றும் அதன் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். குறிப்பாக அவர்கள் இந்த பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் வீடுகளுக்குள் முடங்கி கிடந்த வடமாநில தொழிலாளர்கள் போதிய வேலை, வருமானம், உணவு கிடைக்காததாலும், வீட்டு வாடகையை கட்ட முடியாததாலும் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனவும், அதற்கு அரசு அதிகாரிகள் வாகன போக்குவரத்து செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தமிழக அரசு, ரெயில், பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை இடங்கணசாலை பஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும், மகுடஞ்சாவடி போலீசார் அங்கு விரைந்து வந்து வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story