பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் புதிதாக சேர வாய்ப்பு - கலெக்டர் தகவல்


பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் புதிதாக சேர வாய்ப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 May 2020 10:00 PM GMT (Updated: 10 May 2020 7:00 AM GMT)

பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், 

பி.எம்.கிசான் எனப்படும் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். ஏற்கனவே பதிவு செய்து ஆதார் அட்டை விவரங்கள் பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிகணக்கில் வரவு செய்யப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி இயக்குனரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் இந்த திட்டத்தில் 5-ம் தவணை பணத்தை பெற ஆதார் அட்டையில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே இணையதளத்தில் உள்ள விவரங்கள் அமைந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் ஆதார் அட்டை விவரங்களுடன் 11 யூனியன் பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது வங்கி கணக்குக்கு பதிலாக வேறு வங்கி கணக்குக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பணம் வரவு செய்யப்பட்டு இருந்தால் வங்கி கணக்கு முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் அருகில் உள்ள விவசாய மையத்தை தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் கீழ் பணம் பெற்று பயன்பெறலாம்.

கொரோனா தொற்று உள்ளதால் உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story