என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு அனல்மின்நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டம்


என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு அனல்மின்நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2020 10:09 PM GMT (Updated: 10 May 2020 10:09 PM GMT)

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இதையடுத்து அனல்மின்நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ந்தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன்(வயது 54), ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்வு

இதில் நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் கடந்த 8-ந்தேதி மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நேற்று மாலை கொள்ளிருப்பை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம்(வயது 26) சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 5 பேருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிராம மக்கள் போராட்டம்

இதற்கிடையே சண்முகம் உயிரிழந்தது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானவர்கள் என்.எல்.சி.2-ம் அனல்மின் நிலையம் நுழைவு வாயில் முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராசு, செயலாளர் திலகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொல்லிருப்பு வெங்கடேசன், கூனங்குறிச்சி ஜான்லியோ மற்றும் ரங்கநாதன், தி.மு.க. மாவட்ட துணைதலைவர் ஞானமுத்து, இன்கோர்வ் சொசைட்டி தலைவர் அன்பழகன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பர்மணியன், எஸ்.எடி. பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தெர்மல் லதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன், அலுவலக செயலாளர் குப்புசாமி, தொ.மு.ச. தலைவர் வீரராமச்சந்திரன், பொதுச் செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி மற்றும் பா.ம.க., பாட்டாளி தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். இவர்களது பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து, கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் அந்த பகுதியில் இளைஞர்கள் பலர் நின்று கொண்டிருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

உடலை வாங்க மறுப்பு

மாலை 6 மணிக்கு தொடங்கிய ே- பச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் முதன்மை பொது மேலாளர் தியாகராஜூ, கோதண்டம் பங்கேற்றனர். இரவு 9.30 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தொழிற்சங்கத்தினர், உயிரிழந்த சண்முகத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. மேலும் இழப்பீடாக ரூ. ஒரு கோடி வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். அப்போது, இதை ஏற்க முடியாது என்று தெரிவித்த சண்முகத்தின் உறவினர்கள், தங்களது கோரிக்கைகள் முழுவதும் ஏற்க பட்டால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story