காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: மதுக்கடை உரிமையாளர்கள் மீது பொய் வழக்குகள் முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு


காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: மதுக்கடை உரிமையாளர்கள் மீது பொய் வழக்குகள் முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 May 2020 11:22 PM GMT (Updated: 10 May 2020 11:22 PM GMT)

காவல் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து மதுக்கடை உரிமையாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளதை ஏற்க முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால் பகுதியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பச்சை மண்டலமாக இருந்த காரைக்கால் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது.

வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் தங்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவர விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அழைத்து வரப்படும்போது பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுமார் 2,500 பேர் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய எல்லைகளில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு திரும்ப 2,700 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களை விமானம் மூலம் அழைத்து வர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன். புதுவைக்கு வரும்போது அவர்களுக்கும் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

புதுவை மாநிலத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் தொழிலாளர்களின் ரெயில் கட்டணத்தில் ஒரு பகுதியை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அரசு வழங்கும். தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அரியாங்குப்பம் சொர்ணா நகர், மூலக்குளம், குச்சிபாளையம், திருவண்டார்கோவில் ஆகிய பகுதிகள் உள்ளன. அரியாங்குப்பம் பகுதி மக்கள் தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தனிமைப்படுத்துவதில் மாற்றம்

சொர்ணாநகர் பகுதியில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் தற்போது குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மூலக்குளம் பகுதியில் இருந்து சிகிச்சை பெற்ற 2 பேரும் வீடு திரும்பிவிட்டனர். இந்தநிலையில் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் அவர் இருந்த பகுதி 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படும். அவ்வாறு செய்தால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியை முழுவதும் தனிமைப்படுத்தாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடம் மட்டும் தனிமைப்படுத்தப்படும். இந்த நடவடிக்கையில் இருந்து மற்ற இடங்கள் விடுவிக்கப்படும். அந்த பகுதியில் கடைகள் திறக்கலாம். மக்கள் தடையில்லாமல் செல்லலாம்.

பொய் வழக்குகள்

மத்திய அரசு 2019-20, 2020- 21 ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக ரத்து செய்துள்ளது. இது தேவை இல்லாத ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. கவர்னர் கிரண்பெடி அரசின் நடவடிக்கைகளில் தொடர்ந்து தலையிடுகிறார் என்று புகார் தெரிவித்து இருந்தேன். அது தற்போது மதுக்கடை விவகாரத்தில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ தவறு செய்பவர்களுக்கு துணை போகமாட்டோம். மதுக்கடை உரிமையாளர்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே அரசின் நோக்கம்.

கலால் துறையினர் மீது காவல் துறை தேவையின்றி மூக்கை நுழைத்திருக்கிறது. மதுக்கடை உரிமையாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. புகார் தெரிவித்தவர்கள் மீது போலீசார் வழக்கு போடுகின்றனர். இரவு நேரங்களில் சென்று அவர்களை கைது செய்கின்றனர். ஒருவர் கணக்கு காட்டவில்லை என்பதற்காக அவரின் உரிமத்தை நிறுத்துவது அதிகார துஷ்பிரயோகம். அதிகாரம் இல்லாத காவல் துறையினர் கலால் துறை விஷயத்தில் தலையிடுகின்றனர்.

இது கவர்னரின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. கவர்னர் கிரண்பெடி காவல் துறையில் கடை நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறுகிறார். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. தற்போது மதுக்கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கணக்கு புத்தகங்கள் மதுக் கடைகளில் தான் உள்ளன. இதற்காக அனுமதி மறுக்கப்படும் என்பதை ஏற்க முடியாது.

விசாரணையை தள்ளிவைக்க உத்தரவு

இதுதொடர்பாக நான் தலைமை செயலருக்கும், கலால் துறை செயலருக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதில், கலால் துறையில் நடந்த பிரச்சினைகள் சம்பந்தமாக முறையாக விசாரிக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளர்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இனி நடக்கும் விசாரணைகளை கொரோனா பிரச்சினைகள் முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

ஒரு சிலர் மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு காவல் துறையில் உள்ள சிலர் உடந்தையாக இருந்து வருகின்றனர். இதனை முறையாக தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story