மாமூல் ஆடியோ வெளியான விவகாரம்: வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


மாமூல் ஆடியோ வெளியான விவகாரம்: வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 11 May 2020 5:03 AM GMT (Updated: 11 May 2020 5:03 AM GMT)

மாமூல் ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக சேலம் வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராம ஆண்டவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணல் வியாபாரியிடம் மாமூல் கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில், பேசிய மணல் வியாபாரி ஏற்கனவே மாதம்தோறும் மாமூல் கொடுத்து வருகிறேன்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் எனது வண்டியை மடக்கினீர்கள்? என கேட்பது போலவும், அதற்கு இன்ஸ்பெக்டர் தற்போது கடும் நெருக்கடி இருப்பதாகவும், அமைதியாக சிறிது காலம் இருக்குமாறு பதில் கூறியதாகவும் அந்த ஆடியோவில் பேசப்பட்டு இருந்தது. அந்த ஆடியோவை அந்த மணல் வியாபாரி பதிவு செய்து வெளியிட்டு இருப்பதும் தெரியவந்தது.

பணி இடைநீக்கம்

இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாமூல் ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூவுக்கு சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரது விசாரணை அறிக்கையின்படி நேற்று முன்தினம் வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவரை பணி இடைநீக்கம் செய்து டி.ஐ.ஜி. பிரதீப் குமார் உத்தரவிட்டார். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் இந்த மாதம் ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story