விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் போலீசார் ரோந்து சென்று மூடினர்


விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் போலீசார் ரோந்து சென்று மூடினர்
x
தினத்தந்தி 11 May 2020 9:37 PM GMT (Updated: 11 May 2020 9:37 PM GMT)

விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளை போலீசார் ரோந்து சென்று மூட நடவடிக்கை எடுத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி இறந்தனர். 48 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 248 பேர் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் மற்றும் விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் கொரோனா நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் எந்தவொரு தளர்வும் செய்யப்படாமல் இன்னும் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுபோல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 93 கிராமங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளிலும் எந்த தளர்வும் செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது.

கடைகள் திறப்பு

இந்நிலையில் மே 11-ந் தேதி முதல் அரசு உத்தரவின்படி 34 வகையான கடைகள் திறக்கப்படலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை எந்தெந்த பகுதிகளில் 34 வகையான கடைகள் இயங்கலாம், எந்தெந்த பகுதிகளில் கடைகள் இயங்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பை வெளியிடாததால் பொதுமக்கள் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகினர்.

குறிப்பாக விழுப்புரம் நகர பகுதிகளில் நேற்று காலை முதல் அரசு அறிவிப்பின்படி 34 வகையான கடைகளை திறக்க அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் வந்தனர். ஒரு சிலர், டீக்கடைகள், பழக்கடைகள், பேக்கரி கடைகள், அடகு கடைகள், துணிக்கடைகள், வளையல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஏராளமானோர், கடைவீதிகளுக்கு வரத்தொடங்கினர். இதனால் விழுப்புரம் நகரத்தில் எப்போதும்போல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

போலீசாரின் நடவடிக்கையால் மூடல்

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்று காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர்.

மேலும் ஊரடங்கு தளர்வுகள் எதுவும் செய்யப்படவில்லை, ஆகவே கடைகளை திறக்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மட்டும் வண்ண அட்டையுடன் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லுமாறும் அறிவுறுத்தினர். அதன்படி ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளை அதன் உரிமையாளர்கள் மீண்டும் பூட்டிவிட்டு சென்றனர். அதன் பிறகு பொதுமக்களின் நடமாட்டமும் ஓரளவு குறைந்தது. இதேபோல் ஊரடங்கு தளர்வு செய்யப்படாத திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்பட்டன. உடனே போலீசார் அங்கு சென்று, இன்னும் ஊரடங்கு தளர்வு செய்யப்படவில்லை என்பதால் கடைகளை மூடும்படி அறிவுறுத்தியதன்பேரில் கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story