உத்திரமேரூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் - குழந்தை உயிரிழந்தது


உத்திரமேரூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் - குழந்தை உயிரிழந்தது
x
தினத்தந்தி 11 May 2020 10:45 PM GMT (Updated: 11 May 2020 10:19 PM GMT)

உத்திரமேரூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்தார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 32). இவரது கணவர் ஜெகன். வியாசர்பாடியை சேர்ந்தவர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகாலட்சுமி கணவரை பிரிந்து குழந்தைகளோடு எல்.எண்டத்தூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது.

இதன் மூலம் மகாலட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை அவரது பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

சம்பந்தபட்ட வாலிபரையும் மகாலட்சுமியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி உத்திரமேரூர் அருகே உள்ள மணித்தோட்டம் கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையுடன் குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். குழந்தை கிணற்றில் மூழ்கியது. இது குறித்து உத்திரமேரூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டனர். உத்திரமேரூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story