மதுரையில் ஜவுளிக்கடைகளை இன்று முதல் திறக்கலாம் - கலெக்டர் வினய் அறிவிப்பு


மதுரையில் ஜவுளிக்கடைகளை இன்று முதல் திறக்கலாம் - கலெக்டர் வினய் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2020 7:34 AM GMT (Updated: 14 May 2020 7:34 AM GMT)

மதுரையில் ஜவுளிக்கடைகளை இன்று முதல் திறக்கலாம் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். மதுரை கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும்(நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) முதல்-அமைச்சர் உத்தரவின்படி துணிக் கடைகள், காலணி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ரெடிமேடு ஜவுளிக்கடைகள் திறக்கலாம். இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

தமிழக அரசு அறிவுறுத்தியப்படி இந்த கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். போதுமான அளவு கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story