‘ஊரடங்கால் மக்கள் சிரமத்தை தவிர்க்கவே முதல்-அமைச்சர் தளர்வுகளை அறிவித்துள்ளார்’ - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


‘ஊரடங்கால் மக்கள் சிரமத்தை தவிர்க்கவே முதல்-அமைச்சர் தளர்வுகளை அறிவித்துள்ளார்’ - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 14 May 2020 10:30 PM GMT (Updated: 15 May 2020 4:24 AM GMT)

தமிழகத்தில் ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மேலும் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக மனிதாபிமானத்தோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தளர்வுகளை அறிவித்துள்ளார் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 6 வகையான தொழில்கள் தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம் பட்டாசு, தீப்பெட்டி தொழில் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அனுமதி வழங்கி உள்ளது. தற்போது ஜவுளிகடைகள், நகைக்கடைகள், விசைத்தறி, ஜவுளி ஆலைகள், சிறு பட்டாசு ஆலைகள், ஆயத்த ஆடை தயாரிக்கும் ஆலைகள் ஆகியவை செயல்பட தொழில் முனைவோருடன் நானும், கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் ஆலோசனை நடத்தினோம்.

இந்த தொழில் நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்கினால் தான் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற முடியும். அந்தவகையில் இந்த 6 வகையான தொழில்களும் தொடங்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவர்களிடம் விளக்கி கூறப்பட்டது. அவர்களும் தங்களுக்குரிய பிரச்சினைகளை தெரிவித்தனர். அதற்கான சுமூக தீர்வுகளும் அவர்களிடம் எடுத்து கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நாளை (இன்று) முதல் இத்தொழில்கள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. அருப்புக்கோட்டை பகுதியில் ஒவ்வொரு வீட்டிலுமே விசைத்தறிகள் உள்ளன. சிறு பட்டாசு ஆலைகளும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இது குறித்த விரிவான விவரத்தை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தெரிவிக்கும்.

மத்திய அரசு அறிவித்துள்ள சிறு, குறு தொழில்களுக்கான கடன் உதவி திட்டம் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை செய்த பின்னர் கலெக்டர்களுக்கு தெரிவிப்பார். அதன் பின்னர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு நீட்டிப்பு நேரத்தில் தமிழக மக்களுக்கு மேலும் சிரமமும், கஷ்டமும் ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனிதாபிமானத்தோடு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். தமிழக மக்களும் அதனை புரிந்து கொண்டு தற்போதைய நிலைமையை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்கப்பட்டதால் இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கு வர தொடங்கிவிட்டனர். பட்டாசு ஆலைகளில் கூட அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு, தங்கும் இடமும் வழங்கியது. மாவட்ட அ.தி.மு.க.வும் அம்மா உணவகம் மூலம் அவர்களுக்கு இலவச உணவு வழங்கியது.

மத்திய அரசு, தமிழக அரசுக்கு தேவையான நிதியை வழங்கவில்லை என்று குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல. நெருக்கடியான இந்த நேரத்தில் பிரதமரும், முதல்-அமைச்சரும் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உள்ளது. பிரதமர் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டி உள்ளது. முதல்-அமைச்சரும் நிம்மதியாக உறங்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டி உள்ளது. மாவட்டத்தில் கலெக்டரும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு தாலுகாவில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டி உள்ளது. தற்போதைய நிலையில் எந்த பிரச்சினையும் தீர்வு காணாமல் விடப்படுவதில்லை. விவாதம் செய்யும் இடத்தில் இருந்தால் தான் அதனுடைய சிரமம் புரியும். வெளியில் இருப்பவர்கள் எளிதாக குற்றம் சொல்லலாம். ஆனால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மக்களுக்கு பிரச்சினை ஏற்பட எவ்விதத்திலும் அனுமதிப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story