முன்விரோதத்தில் வாலிபரின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு - 4 பேருக்கு வலைவீச்சு


முன்விரோதத்தில் வாலிபரின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு - 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2020 10:15 PM GMT (Updated: 15 May 2020 9:52 PM GMT)

முன்விரோதத்தில் வாலிபரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பெரிய குளக்கரை தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 29). இவர் கடந்த 2018-ம் ஆண்டு நந்திவரம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு உடையவர். இதனால் சத்தியசீலன் குடும்பத்தினருக்கும், கொலை செய்யப்பட்ட ஜெகன் தம்பி விக்னேஷ்க்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் (27), தனது நண்பர்கள் ரகுமான் (23) மற்றும் 2 பேருடன் சத்தியசீலன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் சத்தியசீலன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

வலைவீச்சு

இதில் கூரை வீட்டின் ஒரு பகுதி மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் பொதுமக்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. இதுகுறித்து சத்தியசீலன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய விக்னேஷ், ரகுமான் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story