கீழ மாசி வீதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 கடைகளுக்கு சீல் வைப்பு


கீழ மாசி வீதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 16 May 2020 5:08 AM GMT (Updated: 16 May 2020 5:08 AM GMT)

மதுரை கீழ மாசி வீதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மதுரை,

கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுவதும் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுகிறது.

அதே போல் இரவு நேரத்தில் மட்டுமே மொத்த வியாபாரம் நடத்த கீழமாசி வீதியில் தளர்வுகள் செய்யப்பட்டன. இதன்காரணமாக அங்கு மக்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது.

சீல் வைப்பு

எனவே அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மைக் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று கீழமாசி வீதி, கீழமாரட் வீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏராளமான கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். எனவே அந்த கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். 3 கடைகளில் அதிக அளவு மக்கள் திரண்டு இருந்தனர். எனவே அந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த ஆய்வில் உதவி ஆணையாளர் விஜயா, உதவி செயற்பொறியாளர் ஷர்புதீன், சுகாதார ஆய்வாளர் முருகன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story