உசிலம்பட்டி அருகே கனமழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் விவசாயிகள் வேதனை


உசிலம்பட்டி அருகே கனமழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 16 May 2020 5:39 AM GMT (Updated: 16 May 2020 5:39 AM GMT)

உசிலம்பட்டி அருகே பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியத்தில் விக்கிரமங்கலம், அய்யனார்குளம், கல்கொண்டான்பட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தற்போது சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்துள்ளனர். இவை தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு கோடைமழை கொட்டி தீர்த்தது.

இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களில் சுமார் 60 சதவீதம் பயிர்கள் தண்ணீர் மூழ்கியது. இதனால் விளைந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அவைகள் மக்கி உதிர்ந்து விடும் நிலை உள்ளது.

வேதனை

கொரோனா ஊரடங்கினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மேலும் பெரும் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் கோடையின் ருத்ரதாண்டவம் ஒரு காரணமாகி விட்டது. இதனால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் செல்லம்பட்டி பகுதியில் மழையால் நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story