திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார் படுத்தும் பணி தீவிரம் பஸ் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு


திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார் படுத்தும் பணி தீவிரம் பஸ் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2020 4:15 AM GMT (Updated: 17 May 2020 4:15 AM GMT)

திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர்,

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முடிவடைய உள்ளது. 4-வது ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் நாளை(திங்கட்கிழமை) முதல் அரசு பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்கவும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை இயக்கும்போது ஓட்டுனர், நடத்துனர் தன் சுத்தம் பேணுதல், பஸ்களுக்கு கிருமிநாசினி தெளித்தல், இருக்கையில் இடைவெளி விட்டு பயணிகள் அமர வைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம்,காங்கேயம்,தாராபுரம், உடுமலை, பழனி ஆகிய ஊர்களில் மொத்தம் 8 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் மொத்தம் 560 அரசு பஸ்கள் உள்ளன. இந்த பணிமனைகளில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பஸ்கள் அனைத்தும் கழுவி சுத்தம்செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திருப்பூர் பழைய பஸ் நிலையம்,புதிய பஸ் நிலையம் மற்றும் கோவில்வழியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நாளை முதல் பஸ்களை இயக்க வேண்டியிருந்தால் எந்தெந்த பஸ்களை எந்த பகுதிகளில் இருந்து இயக்குவது என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதற்காக மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்துள்ளனர். திருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மற்றொரு பகுதியில் இருந்து டவுன் பஸ்களை இயக்கலாம் என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். அரசு பஸ்களை இயக்குவதற்கு தயார்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

தயார் நிலையில்...

இதுகுறித்து திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்க தயாராக இருக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில்வழி ஆகிய பஸ் நிலையங்களை ஆய்வு செய்துள்ளோம். உடுமலை, பழனி மார்க்க பஸ்களை பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஈரோடு, கோவை மார்க்க பஸ்களை புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், தாராபுரம், மதுரை மார்க்க பஸ்களை கோவில்வழியில் இருந்தும் இயக்கலாமா என்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம். எங்கள் தரப்பில் இருந்து பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு பிறகே பஸ்கள் இயக்கம் தொடர்பாக முழுவிவரம் தெரியவரும் என்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, பழைய பஸ் நிலையத்தில் பணிகள் தொடங்கி விட்டதால் கோவில்வழியில் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம். கோவில்வழியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றையும் செய்து கொடுக்கப்பட்டுவிட்டது. எந்தெந்த பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்கலாம் என்று முடிவு செய்து அதன்பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். 

Next Story