திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை


திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2020 11:15 PM GMT (Updated: 17 May 2020 7:00 PM GMT)

திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு தாசில்தால் சீல் வைத்தார்.

திருவாரூர், 

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை செய்து வருகிறது. இதில் வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள் உள்பட பல்வேறு தொழில்களை சார்ந்த கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

இதில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவகம், டீக்கடைகளில் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று தாசில்தார் நக்கீரன் தலைமையில் அலுவலர்கள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் சரிவர கடை உரிமையாளர்கள் கடைபிடிக்கின்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் திருவாரூர் புதிய ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் பேக்கிரியுடன் இணைந்த டீக்கடையில் மக்கள் டீ அருந்த அனுமதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து அரசின் விதிமுறைகளை மீறியதாக நேற்றுமுன்தினம் டீக்கடைக்கு சீல் வைத்தனர். இதனையடுத்து நேற்று நடந்த ஆய்வில் திருவாரூர் வாழவாய்க்கால் ரவுண்டானா பகுதியில் உள்ள 2 டீக்கடையில் மக்கள் டீ அருந்த அனுமதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அந்த 2 டீக்கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Next Story