ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது


ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 May 2020 9:45 PM GMT (Updated: 17 May 2020 9:45 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வல்லியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ராதிகா (36). இவர்களுக்கு அஜய் (7), சஞ்சய் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை ராதிகா தனது மகன் சஞ்சயுடன், காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பாக்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்த்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஸ்ரீமுஷ்ணம் சாய்பாபா கோவில் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராதிகாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த அருட்செல்வம் என்பவர், அந்த வாலிபரை துரத்தி சென்றார்.

வாலிபர் கைது

இதையடுத்து அந்த வாலிபர், தான் பறித்த தங்க சங்கிலியை அருகே வீசி விட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து அருட்செல்வம், இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீநெடுஞ்சேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோமலிங்கம் மகன் தமிழ்செல்வன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story