விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2020 2:04 AM GMT (Updated: 18 May 2020 2:04 AM GMT)

விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது விதியை மீறிய டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கும்படி உத்தரவிட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கொரோனா நோய் தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னை- திருச்சி புறவழிச்சாலையில் அமைந்துள்ள டீக்கடையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை விதிகளின்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய விதிமீறல்களை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த கடைக்கு ‘சீல்’ வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திய கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு பதாகைகளை பொதுமக்கள் பார்வையிடும்படி கடைகளில் கட்டாயம் இடம் பெறச்செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

பழக்கடை, ஓட்டல்களில்...

பின்னர் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள பழக்கடை வியாபாரிகளிடம் கையுறை அணிந்து பழங்களை விற்பனை செய்யும்படி அறிவுறுத்தியதோடு அப்பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் பகுதியில் குப்பைகளை சேரவிடாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அணியும் முக கவசங்களை முறையாக நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும், அவற்றினை நகராட்சி நிர்வாகம் முறையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் நகரில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அண்ணாதுரை, அங்கிருந்த விற்பனையாளர்களிடம் கையுறைகள் அணிந்து உணவு பார்சல்களை விற்பனை செய்யும்படியும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, வீடுகளுக்கு அன்றாடம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள் கட்டாயமாக கையுறை அணிந்து வினியோகம் செய்ய வேண்டும் எனவும், இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், இல்லையெனில் மாவட்ட நிர்வாகத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

திருவெண்ணெய்நல்லூர்

இதனை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனத்தூர், மேல்தணியாலம்பட்டு ஆகிய கிராமங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஒலிப்பெருக்கி மூலம் அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களிடம் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லாதவாறும் மற்றும் வெளியில் செல்லாதவாறும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கான உணவுப்பொருட்கள் உள்ளிட்ட இதர தேவைகளை அப்பகுதிகளில் உள்ள பொறுப்பு அலுவலர்கள் நேரடியாக வந்து வினியோகம் செய்வார்கள், ஆகவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் முறையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story