மேட்டூர் அருகே, பாலியல் தொல்லையால் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது செங்கல் சூளை உரிமையாளர் கைது


மேட்டூர் அருகே, பாலியல் தொல்லையால் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது செங்கல் சூளை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 18 May 2020 3:38 AM GMT (Updated: 18 May 2020 3:38 AM GMT)

மேட்டூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காரணமாக குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் அருகே தாழையூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் 12 வயது சிறுமியும், அவளுடைய தாயாரும் வேலைபார்த்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுபற்றி அந்த சிறுமியிடம் தாய் கேட்டபோது செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி தான் இதற்கு காரணம் என கூறியுள்ளாள். பின்னர் மூர்த்தியிடம் அந்த சிறுமியின் தாய் சென்று இதுபற்றி கேட்டார். அப்போது மூர்த்தி அந்த சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

கைது

இந்தநிலையில் அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த சிறுமியிடம் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளாள். பின்னர் இதுபற்றி அந்த சிறுமியின் தாய் கருமலைக்கூடல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story