திருவண்ணாமலை மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.31 கோடியில் 59 ஏரிகள் புனரமைப்பு - காரப்பட்டில் கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.31 கோடியில் 59 ஏரிகள் புனரமைப்பு - காரப்பட்டில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2020 10:15 PM GMT (Updated: 18 May 2020 4:59 AM GMT)

காரப்பட்டு ஏரியில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.31 கோடியில் 59 ஏரிகள் புனமரைப்பு பணிகள் நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஏரியில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏரியில் மூன்று மதகுகள் மீண்டும் கட்டுதல், 3.50 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரிக்கரையை பலப்படுத்துதல், 5 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல் மற்றும் ஏரியின் எல்லைகள் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகள் மூலம் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் கூடுதல் பாசனம் பெற்று பயனடைய வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த குடிமராமத்து பணியை கலெக்டர் கே.எஸ். கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் ஏ.சுப்பிரமணியன், உதவி பொறியாளர் ராஜாராமன், அரசு அலுவலர்கள், பாசன சங்க தலைவர், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பை சார்ந்த ஏரிகளில் அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.31 கோடிய் 20 லட்சம் மதிப்பீட்டில் 59 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, திருவண்ணாமலை மத்திய பெண்ணை ஆறு வடிநில கோட்டம் மூலமாக 54 ஏரிகள் ரூ.28 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டிலும், காஞ்சீபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டம் மூலமாக வெம்பாக்கம் தாலுகாவில் 5 ஏரிகளில் ரூ.2 கோடிய் 31 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

குடிமராமத்துப் பணிகள் நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக நியமன முறையில் விவசாயிகளின் 10 சதவீதம் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுத்தும், தண்ணீரினை சேமித்தும், பாசன உறுதியளிக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story