சாத்தான்குளம் அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - 8 பேருக்கு வலைவீச்சு


சாத்தான்குளம் அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - 8 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 May 2020 11:15 PM GMT (Updated: 18 May 2020 6:24 PM GMT)

சாத்தான்குளம் அருகே ஊரடங்கில் ஆட்டோ டிரைவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம், 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 36). ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர் மற்றொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார் தனது பெட்டிக்கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் 8 மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

அவர்களை பார்த்ததும், ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் விரட்டிச் சென்று, ஜெயக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மர்மநபர்கள் 8 பேரும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர். கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரதாபன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கொலை செய்த கொலையாளிகள் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சாத்தான்குளம் அருகே ஊரடங்கில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story