பொது போக்குவரத்து தொடங்கப்பட்டதாக கருதி வெளியூருக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்


பொது போக்குவரத்து தொடங்கப்பட்டதாக கருதி  வெளியூருக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள்  ஏமாற்றத்துடன் திரும்பினர்
x
தினத்தந்தி 19 May 2020 5:54 AM GMT (Updated: 19 May 2020 5:54 AM GMT)

பஸ் போக்குவரத்து தொடங்கியதாக எண்ணி வெளியூர் செல்வதற்காக காரைக்குடி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

காரைக்குடி, 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் வசதிக்காக மட்டும் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஒரு பஸ்சில் 20 அரசு ஊழியர்கள் என பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது என எண்ணிய பொதுமக்கள் நேற்று வெளியூர் செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை என அறிந்ததை தொடர்ந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

விரிவான அறிவிப்பு

இதுகுறித்து காரைக்குடி அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொது போக்குவரத்தை தொடங்க அரசு இன்னும் உரிய அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் பொதுமக்கள் பஸ் நிலையங்களில் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து அரசு, பொதுமக்களுக்கு விரிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மேலும் பொது போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டாலும் கூட 50 சதவீத பயணிகளை மட்டும் பஸ்சில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story