பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன
x
தினத்தந்தி 19 May 2020 6:23 AM GMT (Updated: 19 May 2020 6:23 AM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.

பெரம்பலூர், 

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.

பெரம்பலூர்- அரியலூரில் தளர்வு இல்லை

கொரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் அவ்வப்போது நீக்கப்பட்டன. 3-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது.

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த 12 மாவட்டங்களை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அரசு அறிவித்து, அந்த மாவட்டங்களில் ஊரடங்கில் உத்தரவில் தளர்வு இல்லை எனவும், தற்போதையை நிலையே தொடரும் என்றும், 25 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 12 மாவட்டங்களில் பெரம்பலூர், அரியலூர் இடம் பெற்றிருந்ததால், ஊரடங்கு உத்தரவில் தளர்வு இல்லாததால் அனைத்து தரப்பு பொதுமக்களும் சோகத்தில் காணப்பட்டன. மேலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தற்போதைய நிலையே தொடரப்பட்டது.

அரசு அலுவலகங்கள் செயல்பட்டன

கொரோனா வைரசால் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 139 பேரும், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 353 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்த தொழிலாளர்கள் ஆவார்கள். தற்போது 2 மாவட்டங்களிலும் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு 18-ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட்டன. பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்தனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் பணிக்கு தங்களது சொந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வந்து சென்றனர். பெரம்பலூரில் அவர்கள் வந்து செல்ல அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்பவர்கள் கைகளை சுத்தம் செய்துகொள்வதற்கு அரியலூர் அரசு தொழிற் பயிற்சி மாணவர்கள் தயாரித்த பெடல் மூலம் கிருமி நாசினி வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டிருந்தது.

தளர்வு இல்லாததால்...

தளர்வு இல்லாததால் மாவட்டங்களுக்குள் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களுக்குள் டி.என். இ-பாஸ் அனுமதியுடன் வாகனங்களும், டாக்சி, ஆட்டோக்கள் இயங்கின. ஆனால் தேவையில்லாமலும், டி.என். இ-பாஸ் இல்லாமலும் மாவட்டங்களில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று வர டி.என். இ-பாஸ் முறை பின்பற்றப்பட்டது. ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடந்தது. கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடித்தது. வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.

இறுதி ஊர்வலத்திலும் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கடைவீதியில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் கடைகளில் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவும் அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story