முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்


முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 3:08 AM GMT (Updated: 20 May 2020 3:08 AM GMT)

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் ,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளை தவிர கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகள் அனைத்தும் அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டன. இதனிடையே நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சீப்பு, கத்திரிக்கோல், கத்தியுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முடி திருத்தும் தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இன்று (நேற்று) முதல் கிராமப்புற பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை என்று அறிவித்திருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இருக்கிறோம்.

இந்த ஊரடங்கால் நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் பட்டினி சாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எனவே நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையாவது சலூன் கடைகளை திறக்க அனுமதியளித்து பட்டினி சாவில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். அவ்வாறு அனுமதியளிக்கும்பட்சத்தில் நாங்கள் சுகாதார கட்டுப்பாடுகளுடன் எங்கள் பணியை மேற்கொள்வோம் என்றனர்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் குறிப்பிட்ட நபர்கள் சென்று கோரிக்கை மனு கொடுக் கும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகு அவர்கள், கலெக்டர் அண்ணா துரையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக கூறினார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story