ஊட்டியில் இருந்து சொந்த ஊர்களுக்கு 165 வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு


ஊட்டியில் இருந்து சொந்த ஊர்களுக்கு   165 வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 20 May 2020 3:09 AM GMT (Updated: 20 May 2020 3:09 AM GMT)

ஊட்டியில் இருந்து சொந்த ஊர்களுக்கு 165 வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊட்டி,

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அரசு அனுமதி வழங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் 7 ஆயிரத்து 255 பேர் உள்ளனர். வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தியதில், 2,470 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்தனர். இந்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 52 பேர் மிசோரம், மேகாலாயா, ராஜஸ்தான், நாகாலாந்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரெயிலில் செல்கின்றனர்

நீலகிரியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 45 பேர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஊட்டியில் இருந்து அரசு பஸ்சில் கோவை ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து ரெயில் மூலம் ஊர்களுக்கு செல்கின்றனர். பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை, 4 வயதில் ஒரு குழந்தையுடன் பெண் ஒருவர் சென்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொழிலாளர்களுக்கு பிரட், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி அனுப்பி வைத்தார்.

165 பேர்

முன்னதாக வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களது பெயர்களை சரிபார்த்து அரசு பஸ்சில் சமூக இடைவெளி விட்டு அமர வைத்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். ஊட்டி காந்தல், எம்.பாலாடா, மஞ்சனக்கொரை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 120 பேர் தனி பஸ்களில் ஊட்டியில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 4 பஸ்களில் தலா 30 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் இ-பாஸ் பெற்று தங்களது சொந்த செலவில் புறப்பட்டனர். அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வழியனுப்பி வைத்தனர். நேற்று மொத்தம் 165 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story