நீலகிரி மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் அரசு அலுவலகங்கள்


நீலகிரி மாவட்டத்தில்   50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் அரசு அலுவலகங்கள்
x
தினத்தந்தி 20 May 2020 3:27 AM GMT (Updated: 20 May 2020 3:27 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

ஊட்டி,

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் பணிக்கு வந்தனர். இதில் பலர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நீலகிரியில் நேற்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது.

அரசு ஊழியர்களுக்காக ஊட்டி மற்றும் குன்னூரில் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மலைப்பிரதேசம் என்பதால் பலர் தங்களது சொந்த வாகனங்களில் வந்திருந்தனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மஸ் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை தொடாமல் பெடல் மூலம் கிருமி நாசினி வழங்க வழிவகை உள்ளது. இதில் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

முகக்கவசம் அணிந்து...

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை ஊழியர்கள் 100 சதவீதம் பேர் பணிபுரிந்தனர். மற்ற துறை ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்துத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அவர்கள் வழக்கம்போல் அலுவலக பணிகளை முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாமல் வெளியாட்கள் உள்ளே வரக்கூடாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அலுவலகங்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் வரவில்லை. மலை மாவட்டமான நீலகிரியில் கிராமங்கள் வெகு தொலைவில் உள்ளது. மாவட்டத்துக்குள் எங்கு செல்ல வேண்டுமானாலும் அனுமதி பெற தேவையில்லை. இருந்தாலும், வாகன போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வராததை காண முடிந்தது. மாலையில் பணி முடிந்த பின்னர் அரசு ஊழியர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் வீடுகளுக்கு திரும்பினர்.

Next Story