கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்


கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 May 2020 11:15 PM GMT (Updated: 20 May 2020 7:56 PM GMT)

கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

பெங்களூரு,

வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்தை மேற்கொண்ட கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், முன்னணி தலைவர்கள் கலந்து கலந்து கொண்டனர்.

இதில் வேளாண்மை சந்தை சட்ட திருத்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்தை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நாட்டை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய போராட்டத்தை நடத்துகிறோம். மகாத்மா காந்தி சிலையின் முன்பு நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் அடுத்து வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தாமல், பா.ஜனதாவினரை உறுப்பினர்களாக நியமிக்க அரசு சதி செய்துள்ளது. இதை கண்டித்து நாங்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் அல்லது தற்போது உள்ள பிரதிநிதிகளின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும்.

வேளாண்மை சந்தை சட்ட திருத்தம் விவசாயிகளுக்கு எதிரானது. அதை அரசு வாபஸ் பெற வேண்டும். நாங்கள் மாநில அரசின் மக்கள் விரோத கொள்கைளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை. முதலீட்டாளர்களை இழுக்க தொழிலாளர் நல சட்டங்களை திருத்த அரசு முடிவு செய்துள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு போலியானது. அதனால் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை விதான சவுதாவில் நடத்த இந்த அரசு அனுமதிக்கவில்லை.

இவ்வாறு டி.கே. சிவக்குமார் கூறினார்

Next Story