ரிஷிவந்தியம் அருகே 3 கிராமங்களுக்கு ‘சீல்’ வைப்பு


ரிஷிவந்தியம் அருகே 3 கிராமங்களுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 21 May 2020 3:41 AM GMT (Updated: 21 May 2020 3:41 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மரூர்மேட்டூர், வாணாபுரம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த வாரம் மராட்டிய மாநிலத்தில் இருந்து சிலர் வந்தனர்.

ரிஷிவந்தியம், 

 மூங்கில்துறைப்பட்டு அருகே வந்ததும் அவர்களை சுகாதாரத்துறையினர் தடுத்து நிறுத்தி, மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்ததால், அவர் மரூர்மேட்டூரில் உள்ள தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் சங்கராபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் மராட்டியத்தில் இருந்து வந்த அந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 

இதேபோல் மராட்டியத்தில் இருந்து வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுரோடுக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானதால், அவர்களை சுகாதாரத்துறையினர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து சென்றனர். இதுதவிர பள்ளிப்பட்டு கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் பள்ளிப்பட்டு, வாணாபுரம், மரூர்மேட்டூர் ஆகிய கிராமங்களுக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிகளுக்குள் செல்லாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story