சிவகாசி அருகே பயங்கரம் முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை


சிவகாசி அருகே பயங்கரம்  முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 21 May 2020 4:21 AM GMT (Updated: 21 May 2020 4:21 AM GMT)

சிவகாசி அருகே முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள முனீஸ்நகர் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 53), மெக்கானிக். இவரது மனைவி கோவிந்தம்மாள் என்கிற சித்ராதேவி. இவர்களுக்கு முகிலா என்ற மகளும், மகாலிங்கம் என்ற மகனும் உள்ளனர். முகிலாவுக்கு வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆனது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிந்தம்மாள், மகாலிங்கம் இருவரும் வன்னியம்பட்டியில் உள்ள முகிலாவை பார்க்க சென்றுள்ளனர்.

வெட்டிக்கொலை

இதனால் அன்று இரவு நாராயணன் மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார். நேற்று காலையில் நாராயணன் வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும் பிணத்தை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Next Story