மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 May 2020 4:59 AM GMT (Updated: 21 May 2020 4:59 AM GMT)

புதுச்சத்திரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

புவனகிரி, 

சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பேட்டோடை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் வேலு (வயது 30), ஆறுமுகம் மகன் அரவிந்தன் (28). இருவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றுவிட்டு, மாலையில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம் உப்பனாற்று பாலத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் வேலு, அரவிந்தன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுபற்றி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story