சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் இலவச உணவு - பொதுமக்கள் வரவேற்பு


சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் இலவச உணவு - பொதுமக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 21 May 2020 10:20 AM GMT (Updated: 21 May 2020 10:20 AM GMT)

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் இலவச உணவு வழங்கும் நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காலத்தையொட்டி, ஏழை, எளியோர் நலனுக்காக அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இதற்காக நிதி உதவி அளிக்க முன்வந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து நிதி பெற்று மாநகராட்சி வசம் அம்மா உணவக ஊழியர்களும் செலுத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 17-ந்தேதியுடன் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. 18-ந்தேதி முதல் கட்டணம் வசூலித்தே உணவுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தநிலையில் ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அம்மா உணவகங்களில் மீண்டும் இலவச உணவு வழங்கும் நடைமுறை திரும்பியுள்ளது. இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “இடர்பாடான இச்சூழலில் ஏழைகளின் பசியாற்றும் இடங்களாக அம்மா உணவகங்கள் திகழ்ந்தன. இந்தநிலையில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது. இதன்மூலம் யாரையும் எதிர்பார்க்காமல் ஏழைகள் பசியாறலாம்“, என்றனர்.

Next Story