158 பேரை பலிவாங்கிய மங்களூரு விமான விபத்து 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது


158 பேரை பலிவாங்கிய மங்களூரு விமான விபத்து 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 21 May 2020 11:00 PM GMT (Updated: 21 May 2020 9:04 PM GMT)

158 பேரை பலி வாங்கிய மங்களூரு விமான விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

மங்களூரு,

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை உடுப்பி, தட்சிணகன்னடா, உத்தரகன்னடா, கேரள மாநில சேர்ந்தவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி காலை 6.45 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பஜ்பே விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தை விமானி ஓடுதளத்தில் தரையிறக்கினார். அந்த சமயத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடி, தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் அந்த விமானம் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் விமானி, துணை விமானி, 6 விமான பணிப்பெண்கள் உள்பட 158 பேர் உடல் கருகி பலியானார்கள். பலியானவர்களில் 135 பெரியவர்கள், 19 குழந்தைகள், 4 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். மேலும் 8 பயணிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விமான விபத்தில் பலியானவர்களின் நினைவாக மங்களூரு அருகே கூலூரில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு ஆண்டுதோறும் மே 22-ந்தேதி தட்சிணகன்னடா மாவட்ட நிர்வாகம் சார்பில் விமான விபத்தில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதுபோல் மங்களூரு விமான விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்றும் (வெள்ளிக்கிழமை) கூலூரில் உள்ள நினைவு மண்டபத்தில், விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர், போலீசார், பஜ்பே விமான நிலைய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூகவிலகலை கடைப்பிடிக்கவும் தட்சிணகன்னடா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது

Next Story