பெங்களூரு தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.45 லட்சம் பறிப்பு


பெங்களூரு தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.45 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 21 May 2020 10:15 PM GMT (Updated: 21 May 2020 9:36 PM GMT)

பெங்களூரு தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.45 லட்சத்தை பறித்த மைசூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு அனுமந்தநகரை சேர்ந்தவர் மாதவராவ். தொழில் அதிபர். இவர் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர் ஆவார். கொரோனா தடுப்பு ஊரடங்கிற்கு முன்பு இவர் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றிருந்தார். அப்போது மைசூருவை சேர்ந்த ரகுநாத் சேஷாத்திரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரகுநாத், சேஷாத்திரி ஆகியோர், தங்களுக்கு திருப்பதி கோவிலில் அதிகாரிகளை தெரியும். நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பணம் கொடுத்தால் போது சாமி தரிசனம், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய மாதவராவ் அவர்களிடம் பணம் கொடுத்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் மாதவராவை திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். சாமிதரிசனத்தை முடித்து வெளியே வந்த மாதவராவிடம் சேஷாத்திரி சாமிக்கு அணிவித்த பட்டுசேலை, பிரசாதம் ஆகியவற்றை ரகுநாத்திடம் கொடுத்துள்ளேன் என்றும், அவர் கோவில் வெளியே நிற்பதாகவும் கூறியுள்ளார். அதன்படி அங்கு சென்று ரகுநாத்தை அவர் பார்த்துள்ளார்.

அப்போது ரகுநாத், மான் தோலில் செய்யப்பட்ட ஒரு பையில் பிரசாதம், பட்டுசேலை ஆகியவற்றை மாதவராவிடம் கொடுத்துள்ளார். பின்னர் அதனை பூஜை செய்துவிட்டு வருவதாக அந்த பையை அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மாதவராவுக்கு போன் செய்த ரகுநாத், நான் மான் தோல் பை வைத்திருந்ததால் கோவில் அருகில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். உங்களுக்கு தான் அந்த பையை கொண்டுவருவதாக போலீசாரிடம் தெரிவித்தேன். அதனால் போலீசார் உங்களையும் கைது செய்துவிடுவார்கள். நீங்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன்படி மாதவராவ் அங்கிருந்து தப்பி பெங்களூருவுக்கு வந்துவிட்டார். இதற்கிடையே ரகுநாத்தும், சேஷாத்திரியும் மான் தோல் பை வழக்கில் உங்களை நாங்கள் காப்பாற்றி விடுவோம். அதற்காக போலீசாருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி அவரிடம் பணம் கேட்டு வாங்கி வந்துள்ளனர். இவ்வாறு ரூ.45 லட்சத்தை அவர்கள் இருவரும் மாதவராவிடம் இருந்து பறித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் பணம் கேட்டு அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர். அப்போது தான் தன்னிடம் நூதன முறையில் அவர்கள் 2 பேரும் பணம் பறிப்பதை அவர் உணர்ந்தார்.

உடனே சம்பவம் பற்றி அவர் அனுமந்தநகர் போலீசில் ரகுநாத், சேஷாத்திரி ஆகியோர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story