கோத்தகிரி அருகே ஊரடங்கை மீறி தடாகத்தில் குளிக்கும் இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


கோத்தகிரி அருகே   ஊரடங்கை மீறி தடாகத்தில் குளிக்கும் இளைஞர்கள்   நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2020 9:52 PM GMT (Updated: 21 May 2020 9:52 PM GMT)

கோத்தகிரி அருகே ஊரடங்கை மீறி தடாகத்தில் இளைஞர்கள் குளித்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோத்தகிரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பினும், பொது போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் தினமும் பொழுதை கழிக்க முடியாமல், குழுக்களாக இணைந்து கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் குழுக்களாக விளையாடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளதோடு, ஊரடங்கை யாரேனும் மீறுகிறார்களா என்று ட்ரோன்(ஆளில்லா குட்டி விமானம்) மூலம் கண்காணித்து வந்தனர்.

விபரீத விளையாட்டு

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியை ஒட்டி சுண்டட்டி கிராமத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு இளைஞர்கள், சிறுவர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர். எவ்வித அனுமதியும் பெறாமல் நீர்வீழ்ச்சிக்கு சென்று கண்டு களிக்கின்றனர்.

அதுமட்டும் அல்லாமல் நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் தண்ணீர் தேங்கி நிற்கும் சிறிய தடாகத்தில் இறங்கி குளிக்கிறார்கள். மேலும் அவர்கள் ஆபத்தை உணராமல் விபரீத விளையாட்டில் ஈடுபடுகின்றனர். பாறை மீது நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அங்கு பள்ளங்கள், குழிகள், சுழல்கள் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் பலர் சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தரும் இளைஞர்கள் சமைப்பதற்காக நெருப்பு மூட்டி விட்டு, அதை அணைக்காமல் அப்படியே விட்டு, விட்டு செல்கின்றனர். இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊரடங்கு காலத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்வதோடு, அனுமதியின்றி வனப்பகுதிக்குள் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story