வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கோவை மாவட்ட எல்லையில் கூடுதல் மருத்துவ குழுக்கள் நியமனம்


வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு   கோவை மாவட்ட எல்லையில் கூடுதல் மருத்துவ குழுக்கள் நியமனம்
x
தினத்தந்தி 21 May 2020 10:44 PM GMT (Updated: 21 May 2020 10:44 PM GMT)

வெளி மாநிலங்களில் இருந்து கோவை திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட எல்லையில் கூடுதல் மருத்துவ குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவை மாவட்டம் கொரோனா தொற்று இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதனால் மாவட்டங்கள் இடையே வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பிற மாநிலங்கள், மாவட்டங்களில் சிக்கியுள்ள கோவையை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்கள் தவிர வியாபாரம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக கோவையில் இருந்து வெளியூர் சென்றவர்களும் திரும்பி வருகின்றனர். மேலும் நாள்தோறும் ஏராளமானோர் கோவை வருவதற்கு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

கோவை திரும்பும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வாளையாறு, கருமத்தம்பட்டி, ஆனைக்கட்டி, ஓடந்துறை, சின்னக்கள்ளிப்பட்டி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கோவை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை தொடர்ந்து மாவட்ட சோதனை சாவடிகளில் கூடுதல் மருத்துவ குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வாகனங்களில் வருகிறவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ள னரா? என்று சரிபார்ப்பதுடன், அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

வாகனங்கள் எண்ணிக்கை

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறிய தாவது:-

கோவைக்கு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கருமத்தம்பட்டி, ஆனைக்கட்டி, கோமங்கலம் ஆகிய சோதனை சாவடிகளில் வழியாக கோவை வரும் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. எனவே யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது உள்ளதை விட கூடுதலாக 3 மருத்துவ குழுக்கள் சோதனை சாவடிகளில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கருமத்தம்பட்டி சோதனைசாவடியில் மட்டும் 30 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வாகனங்களில் வருபவர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வார்கள்.

கொரோனா பரிசோதனை

வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சந்தேகத்திற்குரியவர்கள் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்

இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கோவை திரும்புகிறவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இ-பாஸ் உள்ளிட்ட உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படு கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story