தாராவியில் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை தொடங்க வேண்டும் முதல்-மந்திரிக்கு, ஜிதேந்திர அவாத் கடிதம்


தாராவியில் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை தொடங்க வேண்டும் முதல்-மந்திரிக்கு, ஜிதேந்திர அவாத் கடிதம்
x
தினத்தந்தி 21 May 2020 11:49 PM GMT (Updated: 21 May 2020 11:49 PM GMT)

தாராவியில் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை தொடங்க வேண்டும் என மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தாராவி மறுசீரமைப்பு திட்டம் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு செய்ய வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன. கொரோனா பிரச்சினையால் மும்பையின் பொருளாதாரம் சரிந்து உள்ளது.

இந்த தருணத்தில், தாராவி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டாலோ அல்லது அதற்கான அறிவிப்பை வெளியிட்டாலோ அது அரசுக்கு பலனை கொடுக்கும். இதனால் வேலை வாய்ப்பு உருவாகி சமூக பொருளாதார நிலை உயரும். எனவே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இதற்கான கூட்டத்தை கூட்டி தாராவி சீரமைப்பு திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Next Story