திருப்பூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது


திருப்பூரில்  தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 21 May 2020 11:53 PM GMT (Updated: 21 May 2020 11:53 PM GMT)

திருப்பூரில் தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி, 


திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). தொழிலதிபரான இவர், ஹாலோ பிளாக் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கரைப்புதூர் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இடத்தை பணம் கொடுத்து வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இந்த இடத்திற்கும் உரிமை கோரி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்திரன் செரங்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சந்திரசேகர் (45) ஆகியோரிடம் சென்று, இந்த பிரச்சினையை முடித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும் சந்திரனிடம் ரூ.70 லட்சம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து முதற்கட்டமாக சந்திரன், ரூ.52 லட்சத்தை மணிகண்டன் மற்றும் சந்திரசேகரிடம் கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

கைது

அந்த பணத்தை கேட்டு நேற்று முன்தினம் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சந்திரன் அலுவலகத்துக்கு மணிகண்டன் மற்றும் சந்திரசேகர் சென்றனர். அப்போது அலுவலகத்தில் இருந்த சந்திரனிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தனது உரிமம் பெற்று வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து பணத்தை கொடுக்குமாறு சந்திரனை, மிரட்டியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த சந்திரன் திருப்பூர் வீரபாண்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story