கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,400 படுக்கைகளை மாநகராட்சி கையகப்படுத்துகிறது


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,400 படுக்கைகளை மாநகராட்சி கையகப்படுத்துகிறது
x
தினத்தந்தி 21 May 2020 11:59 PM GMT (Updated: 21 May 2020 11:59 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,400 படுக்கைகளை மாநகராட்சி கையகப்படுத்துகிறது

மும்பை,

மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,400 படுக்கைகளை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் நிதி தலைநகரான மும்பைக்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அதிவேகம் எடுத்து பரவும் இந்த கொடூர வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மும்பையில் கொரோனாவை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்திருந்தது. பின்னர் திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டது. இதற்கிடையே மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள தனக்கு சொந்தமான மைதானத்தில் 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி மாநகராட்சியிடம் ஒப்படைத்து உள்ளது.

இந்தநிலையில், மும்பையில் உள்ள தனியார் நர்சிங்ஹோம் மற்றும் சிறிய ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வார்டுதோறும் 10 ஐ.சி.யூ. படுக்கை உள்பட 100 படுக்கைகளை கையகப்படுத்தும்படி மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாஹல், வார்டு மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 24 நிர்வாக வார்டுகளிலும் குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 400 படுக்கைகள் கிடைக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் கொரோனாவால் செயல்படாமல் மூடிக்கிடக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது போலீசில் புகார் கொடுக்கும்படியும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story