தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 May 2020 12:18 AM GMT (Updated: 22 May 2020 12:18 AM GMT)

தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வேதாரண்யம், 

தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அகல ரெயில்பாதை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் தேத்தாகுடி தெற்கு கிராமம் உள்ளது. முன்பு மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் உள்ள குட்டியாண்டி கோவில் பகுதியில் 2 ரெயில்வே கேட்டுகள் இருந்தன.

அந்த கேட்டுகளை கிராம மக்கள் தங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர். ரெயில்வே கேட் வழியாக மயானத்துக்கு செல்லும் சாலையும் இருந்தது. பெரும்பாலான விவசாயிகள் இந்த ரெயில்வே கேட்டுகள் வழியாக சென்று வந்தனர்.

கீழ்ப்பாலம்

தற்போது அகல ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவிலின் எதிரே 10 அடி உயரத்துக்கு ரெயில் பாதை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. 2 ரெயில்வே கேட்டுகளும் அகற்றப்பட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் கீழ்ப்பாலம் (சுரங்க பாதை) அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ரெயில்வே கேட் இருந்த இடத்தில் பாதை மூடப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழா காலங்களில் சாமி வீதியுலா வருவது தடைபட்டுள்ளது. மயான சாலைக்கு செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மழை நீர் வடிவதிலும் இடையூறு உள்ளது.

அமைச்சர் உறுதி

எனவே மற்றொரு ரெயில்வே கேட் இருந்த இடத்திலும் கீழ்ப்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் ஆகியோர் நேற்று அந்த பகுதியை பார்வையிட்டனர்.

அப்போது ரெயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் பேசி கீழ்ப்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தனர்.

Next Story